வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 அக்டோபர், 2024

சொல்லுக சொல்லை...

 


 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872)

என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.

மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க என்ன பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், எவ்வளவு பேசவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதனை அறிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பது பழமொழி

குழந்தைகளின் மொழி குழல் யாழைவிடச் சிறந்தது என வள்ளுவர் உரைத்தாலும் பொருளற்ற சொற்களைக் குழந்தைகள் பேசினால் மட்டுமே இரசிக்கமுடியும். நாம் வளரும்போது நம் மொழியும் வளரவேண்டும் என்பதை உணரவேண்டும்.

 இன்றைய சூழலில் இருமொழிகளைக் கலந்து பேசும் வழக்கம் அதிகமாக உள்ளது. தாய்மொழியைப் புறக்கணித்து வேலைக்காக ஆங்கிலம் பேசும் நிலை பலருக்கும் உள்ளது. மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்பதை நாம் உணரவேண்டும்.

 மொழியறிவு தான் சொல் வளத்திற்கு அடிப்படையாகிறது. திருக்குறளில்,

இனியவை கூறல், பயனில சொல்லாமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை என ஐம்பது குறள்களில் சொல்லின் சிறப்பினை வள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

 திருவள்ளுவர், சொல்வன்மை என்ற அதிகாரத்தில்,

நாவன்மை பிற வன்மைகளைவிட சிறந்தது

உயர்வும், தாழ்வும் பேச்சில் உள்ளதை, உணர்ந்து பேசு

அறத்தையும் பொருளையும் விட உயர்வானது திறனறிந்து கூறுதல்

பேச்சுத் திறனில்லாதவரே அதிகம் பேச விரும்புவர்

கற்றதைப் பிறர் உணரக் கூறாதவர், மணமில்லா மலர் போன்றவர்

என உரைத்துள்ளார்.

இனியவை கூறல் என்ற அதிகாரத்தில்,

உண்மையானவர்களின் இனிய சொற்கள் குற்றமற்றவை

ஈதலைவிடச் சிறந்தது இனிய சொல்லே

மனமகிழ்வுடன் கூடிய இனியசொல்லே அறம்

பணிவுடன்,இனிய சொல்லுடையவர்க்கு வேறு அணி வேண்டாம்

இன்சொல்லால் தீமை நீங்கி நன்மை பெருகும்       

என உரைக்கிறார்.

 அவையஞ்சாமை என்ற அதிகாரத்தில்,

 நல்ல பேச்சாளர், அச்சத்தினால் தவறாகப் பேசமாட்டார்கள்

கற்றோரும் போற்றுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோராவார்

போருக்கு அஞ்சாதார் எளியவர், அவையில் அஞ்சாதாரே அரியவர்

நற்சபையில் அஞ்சாமல் பேச, நல்ல நூல்களைப் படி

கோழைக்கு வாள் எதற்கு? அவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?                      பேச்சுத்திறன் இல்லாதவர்கள் பல கற்றாலும் பயனில்லை                          அவையச்சம் கொள்வோர், கல்லாதாரைவிடக் கீழானவர்                               

என்றுரைக்கிறார் திருவள்ளுவர்.

   கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
   அவையல்ல நல்ல மரங்கள்-சபைநடுவே
   நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
   மாட்டா தவன்நல் மரம். (
மூதுரை  -13)   

என்றுரைக்கிறார் ஔவையார்..

 உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்குத்தான்  கிடைக்கும்!

ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர்!

ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பார் ஔவையார்.

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்பார் திருவள்ளுவர்.

  நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….

நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான் என்பார்  கலீல் சிப்ரான்

 'பேசுவதற்கு முன் யோசி, யோசிப்பதையெல்லாம் பேசிவிடாதே' என்பார்கள்.

 தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், தீச்சொல் ஆறாதது என்று சொன்ன வள்ளுவர்,

கனிபோன்ற இன்சொல்லிருக்க, காய்போன்ற வன்சொல் ஏன்? என்று கேட்கிறார்.

·         சொல்லின் பொருளுணர்ந்து பேசவேண்டும்.

·         கேட்போர் உணரும் விதத்தில் பேசவேண்டும்.

·         பேசும்போது சொற்களை முழுமையாக உச்சரித்தல் வேண்டும். சொல்லின் கடைசி எழுத்து வரையில் தெளிவாக உச்சரித்தல் வேண்டும்.

·         ஒருவர் கேட்கும் கேள்விக்குச் சரியாக பதிலளிக்க, முதலில் அவர் கூற வரும் முழுக் கருத்தையும் தெளிவாகப் புரிந்த பின்னரே பதில் அளிக்க வேண்டும்.

·         விரைவாகப் பேசுவதைக் காட்டிலும் சரியாகவும் தெளிவாகவும் பேசுவது நல்லது.

·         அவையறிந்து பேசவேண்டும், கேட்போரின் திறனறிந்து பேசவேண்டும்.

·         என்ன பேசேவேண்டும் என்று அறிந்து பேசுவது மட்டுமின்றி என்ன பேசக்கூடாது என்பதையும் உணர்ந்து பேசவேண்டும்.

·         கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.                                                       643
கேட்டார் மகிழ, கேட்காதவரும் விரும்ப அமைவதே நல்ல பேச்சு

·         பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்

·         மக்கட் பதடி யெனல்.                                                      196

பயனில்லாத சொற்களைப் பேசுவோர் மனிதருள் பதர் போன்றவர்

·         விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.                                         648
சொல்லுபவர் சொன்னால் இவ்வுலகமே அதனை விரைந்து கேட்கும்

என்று உரைக்கிறார்.

 ஒரு கதை,

ஒரு குருகுலத்திலிருந்து படித்துமுடித்துச் சென்ற ஒரு சீடர் சிறந்த பேச்சாளராக வளர்ந்தார். அவரது பேச்சைப் பலரும் விரும்பிக் கேட்டனர். பாராட்டினர். அந்த சீடருக்கு தன் பேச்சின் மீதே கர்வம் உண்டானது. எத்தனை பாராட்டுகளைக் கேட்டாலும் தம் குருவின் பாராட்டைப் பெறுவதே மிக உயர்வானது எனக் கருதிய சீடன் தன் குருவை சந்தித்து, வணங்கி, குருவே தங்களிடம் படித்த நான் இன்று சிறந்த பேச்சாளராகப் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறேன். இருந்தாலும் தங்கள் வாழ்த்துதலைவிட சிறந்தது ஏதுமில்லை என்பதால் தங்கள் பாராட்டுதலைப் பெற வந்தேன் என்றார். அதற்குக் குரு, அப்படியா மிக்க மகிழ்ச்சி எங்கே பேசு.. நான் கேட்கிறேன் என்றார் குரு.. சீடரும் மிகச் சிறப்பாகப் பேசினார். குருவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. சீடருக்கு நாம் இவ்வளவு நேரம் பேசியதற்கு பிற இடங்களில் கைதட்டும் பாராட்டும் கிடைத்தது ஆனால் குருவோ எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறாரே என சிந்தித்து தம் பேச்சை முடித்துக்கொண்டு குருவிடம் கேட்டார், குருவே என் பேச்சு எப்படியிருந்தது என்று..அதற்கு குரு.. நீ எப்போது பேசுவாய் என்று காத்திருந்தேன்.. என்றார்.

திகைத்த சீடரோ, குருவே நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டுதானே இருந்தேன் என்றார். அதற்கு குரு,

சீடனே..

இதுவரை நீ பேசிய உன் பேச்சில் உனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களின் குரலைக் கேட்டேன். நீ படித்த புத்தகங்களின் குரலைக் கேட்டேன்.. அறிஞர்களின் குரலைக் கேட்டேன் நீ இன்னும் பேசவே தொடங்கவில்லை.. என்றபோது சீடன் ஞானம் பெற்றதாக கதை முடிகிறது.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.                                            645

என்று திருவள்ளுவர் சொல்வதுபோல
ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசுவோம் உலகை வெல்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக