1.அறிவு உழைப்பு, உடல் உழைப்பு - இரண்டில் எது பிடிக்கும்??
உடலை இயந்திரமாக்காத அறிவின் உழைப்பு பிடிக்கும்!!
2.அனுபவம், ஆற்றல்?? - இரண்டில் எது சிறந்தது?
அனுபவத்துக்குப் பின் கிடைக்கும் ஆற்றல் சிறந்தது!!
3.கோபம், சிரிப்பு - இரண்டில் எது விரும்பத்தக்கது??
குழந்தையின் கோபம்! ஏழையின் சிரிப்பு!!
4.இன்பம், துன்பம் – எது வரவேற்கத்தக்கது??
துன்பத்துக்குப் பின் கிடைக்கும் இன்பம்!! இன்பத்திற்குப் பின் கிடைக்கும் துன்பம்!!
5.வெற்றி, தோல்வி – எது நல்லது??
தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி!
6.நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது??
நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட
நம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது!!
7.செல்வம், வறுமை – இவற்றுல் எது நிலையானது??
செல்வமும், வறுமையும் மாறிமாறிவரும் என்ற மாற்றம் மட்டுமே நிலையானது!!
8.எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்??
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்!!
9.பற்று, துறவு – ஒரு சான்று தருக?
தாமரை இலையின் நீர்த்துளி போல நீருக்குள்ளே இருந்தாலும் ஒட்டி ஒட்டாமல் இருக்கவேண்டும்!!
10.பரிசு, பாராட்டு – எது விலைமதிப்பு மிக்கது??
உணர்ச்சியற்ற பரிசை விட, மனம் நிறைந்த பாராட்டு விலைமதிப்பு மிக்கது!!
11.உண்மை, பொய் – இவற்றில் எதை நாம் நீக்கவேண்டும்??
உண்மைபோல பொய் பேசுவதையும்,
பொய் போல உண்மை பேசுவதையும் நீக்கவேண்டும்!!
12.கவிதை, உளறல் - எது போற்றத்தக்கது??
உளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது!!
13.சொற்பொழிவு, மொனம் - எது சிறந்தது?
பொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!!
14.கேள்வி, பதில் - எது அறிவை வளர்ப்பது??
மனப்பாடம் செய்து சொல்லும் பதிலைவிட, அறியாமல் வினவும் கேள்வியே அறிவை வளர்க்கும்!!

15.இயற்கை, அறிவியல் – இவற்றுள் எது தேவையானது??
இயற்கையைச் சிதைக்காத அறிவியலே தேவையானது!!
இப்படி என்னுள் தோன்றும் வினாக்களுக்கு, என் அறிவுக்கு எட்டியவரை விடை சொல்லியிருக்கிறேன்..
இதே கேள்விக்குத் தங்கள் அறிவுக்கு எட்டிய பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இப்படித்தான் என் வகுப்பில் மாணவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு அவர்கள் சிந்தித்துப் பதிலளிக்க வாய்ப்பளிப்பேன்.
அப்படியொருநாள் “வெற்றிக்கு வழி“ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு பதில் சொல்லவேண்டும். ஆனால் ஒருவர் சொன்ன பதிலை இன்னொருவர் சொல்லக்கூடாது என்று விதிமுறை விதித்திருந்தேன்.
ஒவ்வொரு மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற பயனுள்ள பல குறிப்புகளைச் சொல்லி வந்தார்கள். எல்லோரும் சொல்லி முடிததவுடன் என் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
அவர்கள் எடுத்த மதிப்பெண்களைவிட அவர்கள் சிந்தித்துச் சொன்ன ஒவ்வொரு குறிப்புகளும் மதிப்புமிக்கனவாகவே எனக்குத் தெரிந்தன.
அப்போது அவர்களிடம் கேட்டேன்...
“ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்புகளைச் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி. இக்குறிப்புகள் எல்லாம் கொண்ட நபரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?“ என்று கேட்டேன்.
(மாணவர்கள் இல்லை என்று பதில் சொல்வார்கள். நான் உண்மைதான் இவ்வெல்லாப் பண்புகளும் கொண்டவராதல் அரிது! இவற்றுள் ஒன்றிரண்டு இருந்தால் கூட வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் என்று சொல்ல எண்ணியிருந்தேன்)
நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து இவ்வெல்லாப் பண்புகளும் கொண்ட நபரைப் பார்த்திருக்கிறோம் ஐயா என்றார்கள்!!!!!!
அப்படியா எங்கே? யாரை? என்றேன்.
மாணவர்கள் அது நீங்கள் தான் ஐயா என்றார்கள்!!
சில மணித்துளிகள் ஆடிப்போய்விட்டேன்!
(எனக்கு நன்றாகத் தெரியும் இவர்கள் பொய்சொல்கிறார்கள்! நகைப்புக்காகவோ, என் மீது கொண்ட அன்பின் மிகுதியாலோ இவ்வாறு சொல்கிறார்கள் என்று)
சில மணித்துளிகளில் மாணவர்களைப் பார்த்து நான் சொன்னேன்.
அப்படியா மிக்க மகிழ்ச்சி!
நீங்கள் சொல்வது உண்மையென்றால்.........
“நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.
அவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. ஆம் எனக்கென்று எந்தப் பண்புகளும் கிடையாது. நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே! என்றேன்.
என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது.
(அன்பின் உறவுகளே...
நேற்று நான் வெளியிட்ட “கல்வி உளவியல்“ என்னும் இடுகை நேற்று “இளமை விகடனில்“ வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.)