
உலகத்தின் அழிவை முன்மொழியும் படமாக இப்போது ருத்ரம் 2012 என்னும் படம் உலகெங்கும் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் உலகத்தின் அழிவு என்பது எப்படியிருக்கும் என்ற சிந்தனை மையக் கருத்தாகவுள்ளது. பைபிள், திருக்குரான் போன்ற மறை நூல்களில் இந்த உலக அழிவு முன்பே கூறப்பட்டுள்ளது என்று கூறும் இப்படத்தில் “ நில அதிர்வு, கடல்கோள் (சுனாமி), எரிமலை, வெண்ணீர் ஊற்று என பலவிதங்களில் இயற்கையின் சீற்றம் அமையும் என்ற கருத்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது.
“இயற்கைச் சீற்றங்களால் உலகம் அழிவதில்லை,
மனிதர்களிடம் அன்பு குறையும் போது தான் உலகம் அழிந்து போகும்”
என்ற காட்சிக்கு திரையரங்கில் பலத்த கைதட்டல் ஒலிக்கிறது.
இந்தப் படத்தில் வரும் காட்சிகள் எதிர்கால சிந்தனை கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என்பதை அறிவுறுத்துபவை.
உலகம் அழியப் போகிறது என்ற செய்தியை மறைநூல்கள் (பைபிள், திருக்குரான்) முன்பே சொல்லியிருக்கின்றன என்று வாதம் செய்பவை.
மறைநூல்களில் மட்டுமல்ல சங்க இலக்கியங்களிலும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன என்பதை எடுத்தியம்புவதாக இவ்விடுகை அமைகிறது. சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.
“ நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ- தோழி- நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிறல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூர்ப் பூநாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?'
குறுந்தொகை-373
மதுரைக் கொல்லன் புல்லன்
அலர்மிக்க வழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.
(அலர் என்பது தலைமக்களின் காதலை ஊர்ப்பெண்டிர் புறம்பேசுதல்)
தலைவன் மீது தலைவி கொண்ட காதல் உறுதி வாய்ந்தது. அதனை வெவ்வாய்ப் பெண்டிரின் அலர் மொழியால் அழித்துவிடமுடியாது என்று கலங்கிய தலைவியிடம் கூறினாள் தோழி.
“நிலம் கீழ்மேலாகப் பெயர்ந்தாலும்
நீரின் தட்பம் நெருப்பிற்கும்
நெருப்பின் வெப்பம் நீருக்குமாக மாறினும்
பெரிய கடல் வற்றி எல்லை தோன்றினாலும், அலர் பேசும் பெண்டிரின் அலர்மொழியால் உன் காதல் அழிந்துபோகாது.
கடிய பற்களையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஊகம் என்னும் குரங்கு பலாப்பழத்தைத் தோண்டுதலால் காந்தள் மணம் வீசும் ஊரெங்கும் பலாப்பழத்தின் மணம் வீசும். அத்தகைய நாடனானான தலைவனோடு நீ கொண்ட நட்பு வெவ்வாய்ப் பெண்டிர் பேசும் அலர் மொழியால் அழியாது கவலைப்படாதே!
என்று தேற்றுகிறாள் தோழி.
அகச்செய்திகள்.
1.தலைவன் மீது தலைவி கொண்ட காதலை ஊரார் அறிந்து தூற்றுவதால் கலங்கிய தலைவியிடம் தோழி இயற்கை, தன்னிலை மாறினாலும் நீ தலைவன் மீது கொண்ட காதல் அழியாது என்று காதலின் ஆழத்தை உணர்த்துகிறாள்
2.குரங்கு பலாப்பழத்தைத் தோண்டியதால் மணம் ஊரெங்கும் வீசியது என்ற குறிப்பால் தலைமக்களின் காதலை ஊரார் அறிந்தமையும் அதனால் தலைவியின் பெற்றோர் அறிந்தமையும் உணரமுடிகிறது.
3.கருங்குரங்கு பலாவினைத் தொடுதல் கண்டு அதனைக் காப்போர் குரங்கினை விரட்ட முற்படுவர். அதுபோல தலைவனிடமிருந்து தலைவியைக் காக்க எண்ணிய பெற்றோர் தலைவியை இற்செறிக்க முற்படுவர். அதனால் தலைவி அஞ்சினாள்.

அறிவியல்ச் செய்திகள்
1. நிலம் கீழ்மேலாகப் பெயரும் என்ற உண்மையை சங்கத்தமிழர்கள் அறிந்திருந்தனர். நிலநடுக்கம் குறித்த அறிவு அவர்களுக்கு இருந்ததை இச்செய்தி புலப்படுத்துகிறது.
2. நீரும் நெருப்பும் தன்னிலை மாறும் என்பதன் வாயிலாக கடல்கோள்(சுனாமி), எரிமலை பற்றியும் பண்டைத்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிலாம்.
3. எல்லை காணமுடியாத கடலும் இயற்கையின் சீற்றத்தால் மாற்றத்தால் எல்லை காணும் நிலை வரும் என்ற சிந்தனையும் எண்ணி வியப்பெய்தத் தக்கதாகவுள்ளது.